டெல்லி மாநிலத்தின் 3வது பெண் முதலமைச்சராக அதிஷி மர்லேனா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டுள்ளது.
டெல்லி மாநில மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான அதிஷி மர்லேனா தேர்வு செய்யப்பட்டார். அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய அரசு அமைக்க அதிஷி துணை நிலை ஆளுநரிடம் உரிமை கோரினார்.
இந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் டெல்லியின் முதலமைச்சராக அதிஷி மர்லேனா பதவியேற்றுக் கொண்டார். அதிஷி மர்லேனாவுக்கு, துணை நிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராக அதிஷி மர்லேனா ஆகினார்.
தொடர்ந்து, அதிஷி மர்லேனா தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள் சவுரப் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசேன், முகேஷ் அக்லாவாட் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவி ஏற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.