ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை சேவல் சண்டையில் ₹ 500 கோடிக்கு மேல் பணம் வைத்து போட்டி நடைப்பெற்றது அதில் சண்டையே போடாமல் வேடிக்கை பார்த்தபடி நின்ற சேவலுக்கு ₹ 1.25 கோடி பரிசு வென்று சாதனை படைத்துள்ளது.
ஆந்திராவில் நடைபெறும் சேவல் சண்டை மிகவும் பிரபலமானது. இந்த சேவல் சண்டை சூதாட்டம் என்று தெரிந்திருந்தும் அனைவரும் விளையாடுகிறார்கள் இதற்காக வருடம் முழுவதும் காத்திருந்து சங்கராந்தி சேவல் சண்டை போட்டி பந்தயத்திற்காக தங்கள் சேவலகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி வளர்கின்றனர். இதற்காக சேவலுக்கு நல்ல தரமான உணவு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த போட்டிகளில் சிலர் அதிர்ஷ்டசாலிகள், மற்றவர்கள் துரதிர்ஷ்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக கோடிக்கணக்கில் பந்தயம் கட்டப்படுகிறது. அவ்வாறு ஆந்திராவில் கோதாவரி மாவட்டங்கள், மற்றும் என் டி ஆர், கிருஷ்ணா, ஏலூரூ உள்ளிட்ட மாவட்டங்களில் சேவல் சண்டை மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த சேவல் சண்டைக்கு ₹ 500 கோடிக்கு மேல் பந்தயம் கட்டி நடத்தப்பட்டது.
இதற்காக அந்தந்த பகுதியில் நுழைவு கட்டணம் பெற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இணையாக சேவல் சண்டை நடத்தப்பட்டது. இதனை காண ஆயிரக்கணக்கானோர் கார்களில் அணிவகுப்பு வந்து பார்வையிட்டு சென்றனர். அவ்வாறு இந்த முறை நடைபெற்ற சேவல் சண்டைகளில் ஒரு சேவல் தனித்து நின்றது. எந்த முயற்சியும், போராட்டமும், சண்டையும் இல்லாமல், தனது முதலாளிக்கு 1 கோடியே 25 லட்சம் சம்பாதித்து கொடுத்தது. மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடந்த சேவல் சண்டையில் ஒரு வட்டத்தில் ஐந்து சேவல்களை விட்டு சண்டைக்கு விடப்பட்டது. இதில் நான்கு சேவல்கள் போட்டியிட்டு சண்டையிட்டது ஆனால் ஒரு சேவல் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கி நின்றது.
இதற்கிடையில், மற்ற நான்கு சேவல்களில் முதல் இரண்டு சேவல்கள் சண்டையிட்டு அதன் கால்களில் கட்டப்பட்ட கத்தியில் வெட்டுப்பட்டு இறந்தன. பின்னர் மற்ற இரண்டு சண்டையிட்டு முதலில் ஒன்று சரிந்து விழுந்து இறந்தது. அனைவரும் சண்டையிட்டு நின்ற சேவலுடன் ஒதுங்கி நின்ற சேவல் சண்டையிட வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் சில நொடிகளிலேயே அதுவரை நன்றாகச் செயல்பட்டு வந்த நான்காவது கோழியும் சரிந்து விழுந்து இறந்தது. இதனால் சண்டையிடாத சேவல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.
எதுவும் செய்யாமல் பந்தயத்தில் வென்ற சேவலுக்கு ₹.1.25 கோடி பரிசு கிடைத்தது. இது சேவலின் உரிமையாளருக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்தது. பணத்தை பரிசாகப் பெற்றபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்பதுபோல் சேவலை பிடித்து அந்தப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. ஒரு காலை கூட அசைக்காமல் நின்ற சேவல் வெற்றி பெற்றதைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்படும் நிலையில் எங்காவது சண்டை நடக்கும் போது உள்ளே செல்வதற்கு பதில் அமைதியாக இருப்பதுதான் சிறந்தது என்ற கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றனர்.