மகாராஷ்டிர மாநிலத்தில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்ததில் 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுமிகள் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர். இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த கொண்டைக்கடலையை விற்பனைக்காகத் தனது வீட்டின் ஒரு பகுதியில் சேமித்து வைத்திருந்தார். தானியங்களில் வண்டுகள் மற்றும் பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்காக, மல்லேஷ் பகல் நேரத்தில் அந்த கொண்டைக்கடலை மூட்டைகள் மீது வீரியமிக்கப் பூச்சி மருந்தை தெளித்துள்ளார்.

தூக்கத்திலேயே முடிந்த வீரிய நச்சு
இரவு நேரத்தில் வழக்கம்போலக் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட வீரியமிக்கப் பூச்சி மருந்திலிருந்து நச்சு வாயு கசிந்து அறையெங்கும் பரவியுள்ளது. இதனை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்த மல்லேஷின் மகள்களான ஆரோகி (6) மற்றும் ஆராத்யா (4) ஆகிய இரண்டு சிறுமிகளும் அந்த நச்சு வாயுவைச் சுவாசித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுத் தூக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸ் விசாரணை
காலை எழுந்ததும் குழந்தைகள் அசைவற்றுப் பிரேதமாகக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் அலறித் துடித்தனர். இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், காற்றில் பரவும் அபாயகரமான ரசாயனப் பூச்சி மருந்தை மூடிய அறையில் தெளித்ததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
