காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் சந்தையில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு – காஷ்மீரில் அண்மை காலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி உஸ்மான் கொல்லப்பட்டார். இதேபோல் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற என்கவுன்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஸ்ரீநகரில் உள்ள சந்தையில் இன்று தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் உள்ள சந்தையில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ராஜா ஹரிசிங் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.