ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி
ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும், நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, மீட்பு பணிகள் மற்றும் மீட்கப்பட்ட நபர்களின் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். மீட்கப்பட்டவர்ளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிலைமை மிகவும் மோசம் அடைவதால், ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி இன்று ஒடிசா செல்கிறார்.பாலாஷோரில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின், கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.