பிரதமர் மோடி ஆசைப்பட்டால் சிறை செல்வதற்கும் நான் தயார் – ராகுல்காந்தி
பதவி நீக்க ரத்துக்குப்பின் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முதல்முறையாக உரையாற்றினார்.
மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் மக்களவைக்குள் வர அனுமதித்ததற்காக சபாநாயகருக்கு நன்றி. பிரதமர் நரேந்திர மோடி விரும்பினால் சிறை செல்லவும் தயார். பாஜக ஆட்சியில் நான் துன்புறுத்தப்படுகிறேன். அதானி குறித்து பேசினால் பாஜகவினர் எரிச்சலடைகின்றனர். அதானியை பற்றி இன்று பேச மாட்டேன், பாஜக உறுப்பினர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக என்னை அவதூறாக விமர்சித்து வருகிறது. இதயத்தின் ஆழத்தில் இருந்து பேசுகிறேன், ஒற்றுமை யாத்திரை இன்னமும் முடியவில்லை. இந்திய ஒற்றுமை பயணத்துக்காக எதையும் தியாகம் செய்ய தயார். மக்களை சந்திப்பதற்காகவே ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறேன். குமரி முதல் இமயம் வரையிலான தனது ஒற்றுமை நடைபயணம் இன்னும் முடியவில்லை. ஒற்றுமை பயணத்தின்போது மக்கள் எனக்கு ஏராளமான உதவிகளை செய்தனர். இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு பிறகு எனது மனதில் இருந்து ஆணவம் அகற்றப்பட்டது. பாஜக ஆட்சியால் நான் 10 ஆண்டுகளாக அவதூறுகளுக்கும் சிறுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுவருகிறேன்.
நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.” என்றார்.