மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர முழு உருவ சிலையை, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இந்த நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த சத்ரபதி சிவாஜியின் உருவ சிலை கீழே விழுந்து சேதம் அடைந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதம் அடைந்தது அவமதிப்பிற்குரிய செயல் என்று மகாராஷடிரா எதிர்க்கட்சி தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக கூட்டணி அரசு சிலை விவகாரத்திலுமா ஊழல் செய்யும் என கேள்வி எழுப்பியுள்ள அவர், இந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மிது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.