மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, இந்த ஆண்டில் இதுவரை 16 இந்திய குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்ட தகவல்களின் விவரம்:


உயிரிழப்பு விவரங்கள்: மேற்காசியப் பகுதியில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக பலியான 16 இந்தியர்களில், 10 பேர் கடலோரப் பணியாளர்கள் (Seafarers) ஆவர்.
நாடுகள் வாரியான பாதிப்பு: ஓமானில் 8 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) 4 பேரும், குவைத்தில் 2 பேரும், சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் தலா ஒருவரும் இந்த மோதல்களால் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் 75 இந்தியர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
கத்தார் விபத்து: இதனிடையே, மேற்காசிய மோதல்களுடன் தொடர்பில்லாத கத்தாரின் ராஸ் லப்பான் (Ras Laffan) எரிவாயு ஆலையில் நேரிட்ட விபத்தில் மேலும் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசின் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்:
பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து வரம்பிற்குட்பட்ட உதவிகளும், உயிரிழந்தவர்களின் உடல்களை நாட்டிற்கு விரைந்து கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் அந்தந்த நாட்டு அரசுகளின் தூதரகங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், போர்க்கால சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் கடலோரப் பணியாளர்களுக்குக் காப்பீட்டுத் தொகையும், அரசின் நலதிட்ட நிதிகளின் கீழ் நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சிக்கு ஆபத்து? இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக்கை வளைக்க திமுக வியூகம்!
