அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக்
குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு “பேஷன்” ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.
அம்பேத்கரின் பெயரை 100 மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவையில் இருந்து பி.ஆர்.அம்பேத்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். அவருக்கு ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவாதம் நிறைவேறாததால், அவர் ராஜினாமா செய்தார்” என்று கூறி இருந்தார்.

அமித்ஷாவின் இந்தப்பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜயிடம் இருந்து கண்டனம் எதுவும் வரவில்லை. இதை சுட்டிக்காடிய விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு ‘‘அம்பேத்கர் நூலை வெளியிட்ட தவெக தலைவர் விஜய் இதுவரை கண்டிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்நிலையில் மிகத் தாமதமாக தற்போது அமித் ஷாவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் விஜய். https://x.com/tvkvijayhq/status/1869336738063057087
அதில், ‘‘யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது அறிக்கையில், பிஜேபி மற்றும் அமிஷா என்ற பெயர்களை பயன்படுத்தாமல், ‘‘யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்’’ என விஜய் தெரிவித்து இருப்பதை பலரும் கண்டித்துள்ளனர்.