தமிழக அரசியல் களத்தில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கைது நடவடிக்கையைக் கண்டித்தும், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் திமுக மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் Liberty Tamil ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
”சட்டமன்றத்தில் பேசியதற்கு இது ‘ரியாக்ஷன்’!”
எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் கைது குறித்து பேசிய அமுதரசன், ”சட்டமன்றத்தில் ‘கதவுகளைப் பூட்டுவோம்’ எனத் தரம் தாழ்ந்த முறையில் முதல்வர் விஜய் பேசிய வார்த்தைகளுக்கு எதிர்வினையாகவே (Reaction) நமது எம்.எல்.ஏ பேசியுள்ளார்” எனக் குறிப்பிட்டார் . ”ஜனநாயக நாட்டில் விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. முதலமைச்சரின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காத காவல்துறை, எதிர்வினை ஆற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றார் .

“மிரட்டல் உருட்டலுக்கு திமுக பயப்படாது!”
தவெக அரசின் இந்த நடவடிக்கை குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், ”15 நாள் ரிமாண்ட், ஜெயில் அடைப்பு போன்ற மிரட்டல்களுக்கெல்லாம் திமுகவினர் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். எத்தனை பேரை கைது செய்தாலும், சட்டப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” எனச் சவால் விடுத்தார். ”அரசியல் முதிர்ச்சியற்ற முறையில், அதிகாரத்தின் திமிரில் சர்வாதிகாரியாக விஜய் அரசு செயல்படத் தொடங்கியுள்ளது” என்றும் குற்றம் சாட்டினார்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு & காவல்துறை மீது விமர்சனம்
மாநிலத்தில் அரங்கேறும் தீவிர குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அமுதரசன் . ”பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள், கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கத் துப்பில்லாத காவல்துறை, மேலிடத்து உத்தரவுக்குக் காத்திருந்து திமுகவினரைக் கைது செய்யும் அடியாள் வேலையைச் செய்து வருகிறது” எனச் சாடினார் . சட்டம்-ஒழுங்கு அப்பட்டமாகச் சீர்கெட்டுள்ள நிலையிலும், காவல்துறையினர் எதிர்க்கட்சியினரைக் பழிவாங்குவதிலேயே கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
வன்னியரசு மற்றும் கூட்டணி அரசியலுக்குச் சாடல்
விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த அவர், ”விசிக தலைவர் திருமாவளவன் பல்வேறு விமர்சனங்களைச் சந்திக்கும் போது அமைதி காக்கும் வன்னியரசு, தவெக தலைவர் விஜய்க்குப் பிரச்சனை என்றவுடன் உடனடியாக முன்னின்று முட்டுக் கொடுக்கிறார்” என்று சாடினார். திமுக எப்பொழுதும் ஜனநாயக வழியிலும், மக்களைச் சந்தித்துத் தேர்தல்கள் மூலமாகவுமே அதிகாரத்தைப் பெற நினைக்குமே தவிர, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்காது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அதிரடி கைது! பதறிய வன்னியரசு.. களத்தில் வெடித்த புதுச் சர்ச்சை!
