இந்திய முஸ்லீம் கட்சியின் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, திருப்பரங்குன்றம் மலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று அசைவ உணவை உட்கொண்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து எக்ஸ்தள பதிவில் பகிர்ந்துள்ள நவாஸ்கனி,”மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக இன்று நேரில் சென்று கள ஆய்வு செய்தோம்.மதுரை மாநகர காவல் ஆணையரை சந்தித்து பிரச்னையின்றி சுமூகமாக கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதேபோல நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் பேசியிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அங்கு தர்காவும், காசி விஸ்வநாதர் ஆலயமும் உள்ளது. தர்காவிற்கு அனைத்து மதத்தினரும் சென்று வருகிறார்கள்.எனவே தேவையற்ற அசெளகரியத்தை அங்கு வரும் மக்களுக்கு ஏற்படுத்தாமல் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.
இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் பேசிய போது உணவு கொண்டு செல்வதற்கு தடை இல்லை ஆடு கோழி எடுத்து செல்வதற்கு இருக்கக்கூடிய தடை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார். சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என காவல் ஆணையர் கூறியதையடுத்து சமைத்த அசைவ உணவை எடுத்துச் சென்று மக்கள் உண்டனர்.
விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு கடந்த காலங்களில் இருந்தது போன்று மக்கள் சிரமம் இன்றி தர்காவிற்கு சென்று வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்து இருந்தார். அத்துடன் அவர் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர்மலை எனக்குறிப்பிட்டுள்ளது மதுரை மாவட்ட மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”ஆன்மீக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.
குறிப்பாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும் என்று, அனைத்து சமூக மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.