ரகசியம் பேசுவதற்காக ஸ்டாலினும், அண்ணாமலையும் வெளிநாட்டுக்கு டூர் செல்வதாக அதிமுக விமர்சித்துள்ளது. சென்னையில் பேட்டியளித்த அக்கட்சியின் மூத்த தலைவர் டி.ஜெயக்குமார், தமிழ்நாட்டில் நேரில் சந்தித்து பேச முடியாது என்பதால் வெளிநாடுகளில் வைத்து ரகசியம் பேச 2 பேரும் டூர் செல்வதாக விமர்சித்தார்.

ரஜினி- துரைமுருகன் விவகாரம் குறித்த கேள்விக்கு,ரஜினியை வைத்து துரைமுருகனை ஸ்டாலின் மட்டம்தட்டி விட்டதாக கூறினார்.
இபிஎஸ் குறித்து விமர்சிக்க, அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என்றும், அவர் 7 நாட்களே ஆயுள்கொண்ட ஒரு விட்டில் பூச்சி என்றும் ஜெயக்குமார் சாடினார்.
திமுக, பாஜக இரண்டும் கார்ப்ரேட் கம்பெனிகள்.அதன் மேனேஜர் அண்ணாமலை, முதலவர் ஸ்டாலின் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அண்ணாமலையின் அரசியல் 3 ஆண்டுகள் தான், ஆனால் அதிமுக ஒரு ஆலமரம். அதிமுகவை சீண்டினால் அழிவுதான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் 1.20 லட்சம் இடங்களில் போட்டியிட போவதாக அண்ணாமலை கூறுகிறார், ஆனால் 1.20 லட்சம் பூத்துகளில் ஏஜெண்ட் கூட பாஜகவுக்கு கிடையாது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என பாஜக பகல் கனவு காண்கிறது.
அண்ணாமலை கற்பனையில் அரசியல் நடத்துகிறார் என்று கூறிய ஜெயக்குமார், அடுத்தத் தேர்தலில் பாஜகவுக்கு 1 தொகுதி கூட கிடைக்காது. நோட்டோவுடன் தான் அக்கட்சி போட்டியிட வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.