Homeசெய்திகள்விளையாட்டு4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது!

4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி – தொடரையும் கைப்பற்றியது!

-

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மூன்று போட்டிகளில், இங்கிலாந்து முதல் போட்டியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 23ம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோரூட் 122 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜீரோல் 90 ரன்களும் ஜெய்ஸ்வால் 73 ரன்களும் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 145 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதன் காரணமாக இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களும், சுப்மன் கில் 53 ரன்களும், ஜுரோல் 39 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

MUST READ