
ஓய்வுப் பெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்ற போதிலும், இன்னும் ஒரு சீசனில் விளையாடவே மனம் விரும்புவதாக கேப்டன் தோனி தெரிவித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நேற்று (மே 29) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைச் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது. அதைத்தொடர்ந்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கிய நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நள்ளிரவு 12.15 மணிக்கு மீண்டும் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை கைப்பற்றியது. பி.சி.சி.ஐ.யின் செயலாளர் ஜெய் ஷா, சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையையும், ஐ.பி.எல். வெற்றி கோப்பையையும் வழங்கிப் பாராட்டினார்.
ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி!
இதனிடையே, தோனி களத்தில் இறங்கி அணிக்கு வெற்றியைத் தேடித் தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். ஆட்டம் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்திற்கு சென்ற போது, தோனி அமைதியாக கண்ணை மூடியபடி, அமர்ந்திருந்தார். ஜடேஜா வெற்றிக்கான பவுண்டரியை அடித்ததைக் கூட, தோனி பார்க்கவில்லை. சக வீரர்களின் உற்சாக முழக்கத்திற்கு பிறகே தோனி வெற்றியை உணர்ந்தார். பின்னர், ஜடேஜாவைக் கட்டி அணைத்து உற்சாகத்துடன் தூக்கி வெற்றியைக் கொண்டாடினார்.

போட்டி பின் பேசிய கேப்டன் தோனி, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அம்பதி ராயுடு முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தனது உடல்நிலையைப் பொறுத்தே முடிவெடுக்கப் போகிறேன். ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்புக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தான் நினைக்கிறேன். ஓய்வுப் பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்ற போதிலும், இன்னும் ஒரு சீசனில் விளையாட மனம் விரும்புகிறது” என்றார்.