நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் உயர்கல்வி மசோதா ஆகியவற்றுக்குத் தங்கள் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். அப்போது, தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவையும் திமுக தீவிரமாக எதிர்க்கும் என்று அவர் அதிரடியாகக் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு, திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு (Delimitation), உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் விவகாரம் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை விரிவாக விளக்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் திருச்சி சிவா கூறியதன் முக்கிய அம்சங்கள்
மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு குறித்து இன்னும் எந்தவொரு வரைவு மசோதாவையோ அல்லது அதிகாரப்பூர்வத் தகவலையோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வைக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இது குறித்துப் பல்வேறு தகவல்கள் வருகின்றன. இருப்பினும், தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலோ அல்லது பாதிக்கும் வகையிலோ எந்த வடிவில் மசோதா வந்தாலும், அதை திமுக முழுமையாக எதிர்க்கும்.

25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்
மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. 1976-இல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலும், 2001-இல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் தொகுதி மறுசீரமைப்பு தலா 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல, இப்போதும் மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிலைப்பாடாகும்.
மகளிர் இடஒதுக்கீடு
தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவதில் திமுகவுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
உயர்கல்வி மசோதாவுக்கு எதிர்ப்பு
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உள்ளிட்ட அமைப்புகளைக் கலைத்துவிட்டு, ஒட்டுமொத்த உயர்கல்வி அதிகாரத்தையும் டெல்லியில் உள்ள மத்திய அரசிடம் குவிக்கும் வகையில் கொண்டுவரப்படும் உயர்கல்வி நிறுவனங்கள் மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக கடுமையாக எதிர்க்கும்.
திரிணாமூல் காங்கிரஸ் விவகாரத்தில் வெளிநடப்பு
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த 20 எம்பிக்களுக்குத் தகுதி நீக்கம் கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்படி தேவையான 2/3 பங்கு (21 எம்பிக்கள்) எண்ணிக்கை இல்லாத அக்குழுவை தனிப் பிரிவாக அங்கீகரித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைத்திருப்பது முறைகேடானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரசுடன் சேர்ந்து திமுகவும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.
தனியாக அமர ஏற்பாடு
காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்ற முடிவின் அடிப்படையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் தனியாக அமர்வதற்காகக் கேட்கப்பட்ட தனி இருக்கை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் திமுகவின் அதிரடி: மேகதாது விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!
