3 ஆண்டுகள் இடைவேளை- விஜயின் மாஸ்டர் பிளான்
நடிகர் விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை முடித்துவிட்டு 2 முதல் 3 ஆண்டுகள் ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பல தகவல்கள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்வது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது போன்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பாக கூட தொகுதி வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தது மட்டுமின்றி நாளைய வாக்காளர்களான ஒவ்வொரு மாணவர்களும் அவரவர் பெற்றோர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுமாறு அறிவுரை வழங்கினார்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தீவிர அரசியலில் இறங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்திற்கு பின் 3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.