தமிழகத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2024-25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், ரூ.8,325 கோடி முதலீட்டுடன் தமிழ்நாடு 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு மேலும் இரு இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் திறனை தமிழ்நாடு இழந்து வருவது உறுதியாகி உள்ளதாகவும தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மராட்டிய மாநிலம் மொத்தம் ரூ.70,795 கோடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. கர்நாடகம், தில்லி, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன. முதலிடம் பிடித்துள்ள மராட்டியம் ஈர்த்துள்ள முதலீட்டில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்,
இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 8.8% ஆகும். அதன்படி பார்த்தால் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் தமிழ்நாட்டின் பங்கு குறைந்தது 8.8% ஆக இருந்திருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு ரூ.19 லட்சத்து 21,607.72 கோடி ஆகும். அதில், ஒரு லட்சத்து 69,101 கோடி ரூபாயை ஈர்த்திருக்க வேண்டிய தமிழ்நாடு, கிட்டத்தட்ட அதில் பாதி அளவான ரூ.92,569 கோடியை மட்டுமே ஈர்த்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் திறனுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு ஆகும் என்று அன்புமணி குறிப்பிட்டு உள்ளார்
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் தொழில் முதலீடு அதிகரித்து விட்டது போன்ற பொய்யான பிம்பத்தை தமிழக அரசு ஏற்படுத்த முயல்வதாகவும், ஆனால், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், 2021-ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 39 மாதங்களில் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு வெறும் ரூ.68,145 கோடி மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு முதலீடுகளின் அளவு ரூ.68,145 கோடி மட்டும் தான். இதில் பாதியளவுக்கு உள்நாட்டு முதலீடு கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், தமிழகத்தின் மொத்த தொழில் முதலீட்டு வரவு ரூ. 1 லட்சம் கோடி என்ற அளவில் தான் இருக்கும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிவதாக மாயத் தோற்றம் ஏற்படுத்துவதை விடுத்து, உண்மையாகவே மராட்டியம், குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.