கிருஷ்ணகிரி அருகே கைக்கடிகாரத்தை திருடியதாக பள்ளி மாணவியை தாக்கிய விவகாரத்தில் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்துள்ளது. இந்த போட்டியை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் என்பவர் நடத்தியுள்ளார். அப்போது அவரது கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவியின் பள்ளியை சேர்ந்த பயிற்சியாளர், தியாகராஜனுக்கு புதிய கடிகாரத்தை வாங்கிகொடுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தியாகராஜன் பயிற்சியாளரை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் பேருந்துக்காக நின்றிருந்த மாணவியை சமராரியாக தாக்கினார். இது தொடர்பாக பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, உடற் பயிற்சியாளர் தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.