கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்டப்பட்டு வரும் விவகாரத்தில், தற்போதைய தவெக அரசின் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாகவும், அவர்கள் தங்களது பேச்சை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடுமையாகச் சாடியுள்ளார்.


வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துரைமுருகன், மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழக அரசின் அணுகுமுறை குறித்துத் தெரிவித்த முக்கியக் கருத்துகள் விவரம் பின்வருமாறு:
“நீங்களா? நானா? என்று பேச இது விளையாட்டு அல்ல”
மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன், “நம்முடைய முதல்வர் விஜய் எதற்காகத் திடீரென கர்நாடகா செல்கிறார்? அதேபோல், ‘மேகதாது அணை விவகாரத்தில் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும், முந்தைய ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் செய்த குளறுபடியால்தான் தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது’ என்று ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் பொறுப்பில்லாமல் பேசி வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் தொடர்ந்த அவர், “தயவுசெய்து ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘நீங்களா? நானா?’ என்று அரசியல் ஆடுகளத்தில் பேசுவது போலப் பேசக்கூடாது. மேகதாது அணை என்பது வெறும் அரசியல் களம் அல்ல; அது தமிழகத்தின் உரிமையோடும், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும் தொடர்புடைய ஒரு நாட்டுப் பிரச்சனை” எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர்களுக்குக் காரசார அறிவுறுத்தல்
தமிழகத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் நிலவும் சிக்கல்களை உணராமல், தற்போதைய அமைச்சர்கள் முன்னாள் ஆட்சியாளர்கள் மீது பழிபோட்டுத் தப்பிக்க நினைப்பதாகச் சாடிய அவர், “முன்னாள் அமைச்சர்கள் மீது பழி போடுவதை விட்டுவிட்டு, பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அமைச்சர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அடக்கி வாசிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மாநிலத்தின் மிகமுக்கியமான வாழ்வாதாரப் பிரச்சனையில் தவெக அரசு காட்டும் இந்த மெத்தனப் போக்கும், அமைச்சர்களின் பொறுப்பற்ற அறிக்கைகளும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
