ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட இரு இளம்பெண்களின் உடல்களைச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகம் மாற்றி ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தின் பின்னணி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான அனுஷ்கா என்பவரும், மணலி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பிரியதர்ஷினி என்ற இளம்பெண்ணும் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன.
உடல்கள் மாறியது எப்படி?
பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் முதலில் பிரியதர்ஷினியின் பெற்றோர் எனக் கருதி ஒரு சடலத்தை ஒப்படைத்தது. அதைத் தங்கள் மகளின் உடல் என எண்ணிப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், அன்றைய தினமே இறுதிச்சடங்குகள் செய்து மாலையில் உடலை நல்லடக்கமும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை அனுஷ்காவின் பெற்றோரிடம் மற்றொரு சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த உடலைப் பார்த்த அனுஷ்காவின் பெற்றோர், அது தங்கள் மகளின் உடல் அல்ல என்று கூறி மருத்துவமனை நிர்வாகத்திடம் உடனடியாக முறையிட்டனர். விசாரணையில், இருவரின் உடல்களும் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.
புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி எடுத்து ஒப்படைப்பு:
அனுஷ்காவின் பெற்றோர் தங்களிடம் இருந்த பிரியதர்ஷினியின் உடலுடன் மணலி பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு அனுஷ்காவின் உடல் ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து அனுஷ்காவின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மணலியில் புதைக்கப்பட்ட அனுஷ்காவின் உடலைப் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் முன்னிலையில் தோண்டி எடுத்த அதிகாரிகள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, முறையான உடல்களை அந்தந்தக் குடும்பத்தினரிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த பெரும் குளறுபடி குறித்து மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
