நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாகச் சென்னையிலும் மாணவர் போராட்டங்கள் கொந்தளிப்பாக வெடித்துள்ளன.
மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு
சென்னையில் உள்ள புகழ்பெற்ற மாநிலக் கல்லூரி (Presidency College) மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்துக் கல்லூரி வளாகத்திற்குள் திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் நீட் தேர்வுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு, மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அவர்கள் தீவிரக் கோஷங்களை எழுப்பினர்.

சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்
போராட்டம் குறித்து மாணவர் அமைப்பின் பிரதிநிதி சம்சீர் அகமது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “நீட் தேர்வு ரத்து மற்றும் மத்திய அரசின் மாணவர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ‘சாஸ்திரி பவனை’ முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளோம்,” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் நுங்கம்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அந்த இடமே பரபரப்பான சூழலாக மாறியுள்ளது.
சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம் அறிவிப்பு: தீவிரமடையும் போராட்டத்தால் அரசியல் கட்சிகள் நேரில் ஆதரவு!
திராவிடர் விடுதலைக் கழகம் நேரில் ஆதரவு
மாணவர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டக் களத்திற்குத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் நேரில் வருகை தந்து, மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தங்களது அமைப்பின் முழு ஆதரவைத் தெரிவித்தார். மாணவர்களின் இந்தத் தொடர் போராட்டங்களால் தலைநகர் சென்னையில் நீட் எதிர்ப்பு அலை மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், கல்வித் துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
