அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.![]()
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்து உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பல ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன. இதன் ஒரு பகுதியாக, 2020ஆம் ஆண்டு தமிழக அரசு 1,146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி உதவி பேராசிரியர்களாக நியமிக்க அரசாணை வெளியிட்டது. ஆனால் பின்னர், 2023ஆம் ஆண்டு அந்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப புதிய தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி 4000 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்றும் 2024 ஏப்ரல் 2ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்கல்வித்துறை மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களை நேரடியாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தது.
மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் தேர்வு நடைமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் 6 மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட் சூட் போட்டோஷூட் அரசு வேண்டாம் – விஜய்க்கு ஈபிஎஸ் அறிவுரை
