திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
திருப்பூர் மாவட்ட அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கை கொண்டாடும் விதமாக ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்யும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக திருப்பூரில் இருந்து ராமர் பாதங்களை ராமேஸ்வரம் வரை ஊர்வலமாக எடுத்துச்சென்று அங்கு பூஜை செய்து, அயோத்திக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், தொடக்க விழாவுக்கும் வாகன ஊர்வலத்துக்கும் அனுமதி அளித்து காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனவில் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது, காவல்துறை தரப்பில், மனுதாரர் மீது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அனுமதியின்றி விநாயகர் சிலைகளை வைத்தது தொடர்பான புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மனுதாரர் கோயிலுக்குச் செல்வதையோ, தரிசனம் செய்வதையோ யாரும் தடை செய்யவில்லை என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்படு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்று ராமர் பாதம் கொண்டு செல்லும் தொடக்க நிகழ்வுக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.
