ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கனஅடியும், கே.ஆர்.எஸ். அணையிலிருந்து வினாடிக்கு 16,523 கனஅடியும் என மொத்தம் 21,523 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 8000 கனஅடியாக இருந்த நீர்வரத்து அது படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு 14,000 கன அடியாக உயர்ந்தது. அது இன்று காலை 18 ஆயிரம் கன அடியாக மேலும் உயர்ந்தது.


இதனால், ஒகேனக்கல் ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகள், காவிரியாற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்று விடுமுறை தினத்தை கொண்டாடக் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். எனினும் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை நம்பியுள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.