கலைஞர் மகளிர் உரிமைத்தொகை- விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் படி, குடும்ப பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இரண்டு கட்டமாக முகாம்கள் நடைபெற்றது. இதில் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக, 12,50,682 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டதில், 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வயது ஏதுமில்லை. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதம் முதல் விண்ணப்பம் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், நாளை முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், தகுதிவாய்ந்த மகளிர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே முகாம்களில் பதிவு செய்ய இயலாத குடும்பத் தலைவிகள், 3 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம். 2 கட்டங்களாக நடைபெற்ற முகாமில் 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளன.