
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே செட்டியம்பாளையத்தில் நேற்று மதியம் அண்ணமார் கோவில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் அம்மை அழைத்தல் நிகழ்வை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் பரண் மீது ஆட்டுக் கிடாய் ரத்தம் குடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில் நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கோவில் பூசாரியான பழனிசாமி (வயது 45) என்பவர் ஆட்டுக் கிடாயின் ரத்தத்துடன் வாழைப்பழத்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதில் அவருக்கு சிறிது நேரத்தில் வாந்தியும் சோர்வும் ஏற்பட்டதால் அருகிலுள்ள வேப்பமரத்து அடியில் அமர வைக்கப்பட்டார்.

சற்று நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்படவே ஊர் பெரியவர்கள் அவரை கோபி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டு ரத்தம் குடித்த கோவில் பூசாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
