spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமிக்ஜம் புயல் எதிரொலி... தற்காலிகமாக மூடப்படும் சென்னை விமான நிலையம்!

மிக்ஜம் புயல் எதிரொலி… தற்காலிகமாக மூடப்படும் சென்னை விமான நிலையம்!

-

- Advertisement -

மிக்ஜம் புயலால் சென்னைவாசிகளின் இயல்புநிலை வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியும் வீடுகள் மற்றும் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களும் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக கூடுவாஞ்சேரி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் அதிக அளவு வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து இருக்கின்றன. பாதுகாப்பு காரணம் கருதி நள்ளிரவு முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சுரங்க பாதைகள் ஆன 14 சுரங்கப்பாதைகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளன. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர் பெரம்பூர் போன்ற பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சாலையில் மக்கள் போக்குவரத்து மிக குறைவாகவே காணப்படுகிறது. நள்ளிரவு முதல் விடாமல் பெய்து வரும் அதிக கன மழையால் பல இடங்களில் மழை நீர் முழங்கால் அளவு தேங்கியும், வெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களிலும் வெள்ள நீர் பாதித்துள்ளது. தாம்பரம் உட்பட பல ரயில் நிலையங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகள் தவிர யாரும் வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. பல இடங்களில் சாலை தடுப்புகள் அமைத்து போலீசார் கடற்கரையோர பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இந்த அதி கன மழையால் நீர் அதிகளவு தேங்கியுள்ளது. விமானங்களின் ஓடுபாதையில் நீர் தேங்கி இருப்பதால் விமானங்களை இயக்குவதற்கு சிரமமாக இருக்கும். மேலும் எந்தவித விபத்துக்கும் வழி செய்யாமல் இருக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் இரண்டு மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9:40 முதல் 11:40 வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக கனமழை இன்னும் இரவு 8 மணி வரை நீளும் என்பதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ள நேரம் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ