கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சி- பொன்முடி
வெளிநாடு முதலீடுகள் குறித்த ஆளுநர் ரவியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காகவே ஆளுநர் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைந்துவிட்டது என்று கூறுகிறார். ஆளுநர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். கல்வியில் அரசியலை புகுத்த வேண்டுமென ஆளுநர் அரசியல் செய்கிறார். தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை. அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை செய்கிறார்கள். பேப்பரையாவது ஆளுநர் படிக்க வேண்டும். அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது.
வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு சென்றுள்ளார், அவர் ஊட்டி சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. வெளிநாடு முதலீடுகள் விவகாரத்தில் உண்மை தன்மையை தெரிந்து ஆளுநர் பேச வேண்டும். தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் முன்னேறி உள்ளன. தமிழகத்தில் கல்வி தரம் குறைந்துவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முரணாக உள்ளது.
புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசியல் செய்யும் நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருகிறார். தமிழக கல்வித்துறையில் அரசியலை புகுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சிக்கிறார்” எனக் கூறினார்.