விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு திட்டத்தில் விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பரவனாறு வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி துவங்கிய இந்த பணியின்போது விவசாய நிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஆனாலும் போலீஸ் பாதுகாப்போடு 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் வாய்க்கால் வெட்டும் பணி நடந்தது. 28-ஆம் தேதி பாமகவினரின் என்எல்சி முற்றுகை போராட்டத்தால் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று 29ஆம் தேதி எதிர்ப்பு எழுந்த விவசாய நிலங்களில் பணிகள் நடைபெறாமல் மற்ற இடத்தில் வாய்க்கால் வெட்டும் பணி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பணிகள் மீண்டும் துவங்கின. விவசாய நிலங்களில் வளர்ந்துள்ள பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் பரவனாறு வடிகால் வாய்க்கால் பட்டும் பணி விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக இன்று இரவும் பணிகள் தொடர்ந்து நடந்தது. வடிகால் கால்வாயின் மேல் பகுதியில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரவு நேரத்திலும் மின் விளக்கு வெளிச்சத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.