
ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே முதியவர் ஒருவர் ரயில் வந்துகொண்டிருந்தது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது வேகமாக வந்த ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் கால் துண்டான நிலையில் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார்? எங்கிருந்து வந்தார்? என்பது குறித்து விசாரணையை தொடங்கினார்.
விசாரணையின் முடிவில் அவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காசி வேலு (67) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது மகன் தயாளன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை நேரில் வரவழைத்து உயிரிழந்த முதியவர் அவரது தந்தைதானா என அடையாளம் காணப்பட்டு, பின்னர் அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. தண்டவாளத்தை கடக்க முயன்று முதியவர் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.