ரூ.125 கோடி கல்விக்கடன் வழங்கி மதுரை சாதனை- எம்.பி.சு.வெங்கடேசன்
இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதுரையில் 125 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கி சாதித்துள்ளதாகவும், கடன் வழங்குவதில் பின்தங்கியுள்ள தனியார் வங்கிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அதிக கல்விக்கடன் வழங்கி சாதித்த கனரா, எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளை அழைத்து எம்.பி. சு.வெங்கடேசன் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்பி வெங்கடேசன், “மதுரை மாவட்டம் முழுவதும் கல்விக்கடன் வழங்க எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் விளைவாக 2022-23ம் கல்வியாண்டில் மட்டும் ரூ.125.98 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3122 நபர்கள் விண்ணப்பித்த நிலையில் 2533 நபர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ரூ.111.48 கோடியும், தனியார் வங்கிகள் ரூ.14.50 கோடியும் வழங்கி உள்ளன.
இந்தியா முழுவதும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் அங்கு 60% மட்டுமே கடன் வழங்கப்படும் நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 81% வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக மதுரை விளங்குகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த அளவை இன்னும் அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும். 45% மட்டுமே கடன் வழங்கியுள்ள தனியார் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்படும்.
கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சில சிரமங்கள் உள்ளன. அவர்கள் மாவட்ட நிர்வாகம் நடத்தும் கல்விக்கடன் முகாம்களில் அவசியம் பங்கேற்க வேண்டும். மாணவர்களுக்கான கல்விக்கடன் வட்டியை தள்ளுபடி செய்ய நாடாளுமன்றத்தில் கேட்டு உள்ளோம். இது கொள்கை சார்ந்த முடிவு என்பதால் அதற்காக தனி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார்.