உலகெங்கிலும் வாழும் படுகர் இன மக்களுக்கு படுகர் தின நல்வாழ்த்துகள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என நான்கு சீமைக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் அமைதியை போற்றும் வகையில் வெள்ளை கொடி ஏற்றப்படுவது பாராட்டுதலுக்குரியது. இத்தினத்தில் படுகர் மக்களின் பாடல்கள் எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், பாட்டு பாடியவர்கள், பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து படுக இன்னிசை கச்சேரி நடைபெறும். இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி மகிழ்வார்கள். உலகெங்கிலும் வாழும் படுகர் இன மக்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இத்தினத்தைக் கொண்டாடும் இன் நன்னாளில் படுகர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.