தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் (RC) பெறுவதற்கான நடைமுறையில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இனி புதிதாக வழங்கப்படும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC-களுக்காக அச்சிடப்பட்ட அட்டைகள் மற்றும் ஆவணங்களை தபால் மூலம் அனுப்பும் நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.


இதற்கு பதிலாக, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இனி உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்
புதிய நடைமுறையின்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு முடிந்து விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட நாளிலேயே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அதேபோல், புதிய வாகனத்தை பதிவு செய்த பிறகு அதற்கான RC-யையும் டிஜிட்டல் முறையில் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இதனால் இதுவரை அச்சிடப்பட்ட ஆவணம் தபால் மூலம் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
QR Code மூலம் சரிபார்ப்பு
டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யில் QR Code இடம்பெறும். அந்த QR Code-ஐ பயன்படுத்தி சம்பந்தப்பட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மையை அரசு தரவுத்தளத்தில் உடனடியாக சரிபார்க்க முடியும்.
இதன் மூலம் போலி ஆவணங்களை பயன்படுத்துவதை தடுப்பதுடன், வாகனச் சோதனைகளின்போதும் ஆவணங்களை சரிபார்ப்பது எளிதாகும்.
தாளில் பிரிண்ட் எடுத்தும் பயன்படுத்தலாம்
டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமம் அல்லது RC-யை சாதாரண தாளில் பிரிண்ட் எடுத்தும் பயன்படுத்தலாம். QR Code தெளிவாக இருந்து, அதன் மூலம் மின்னணு முறையில் ஆவணத்தை சரிபார்க்க முடியும் என்றால் அந்த பிரிண்ட் பிரதியும் செல்லுபடியாகும்.
மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்களை தேவைக்கேற்ப DigiLocker மற்றும் Parivahan போன்ற தளங்களிலும் அணுக முடியும்.
பழைய அச்சு ஆவணத்தை கட்டாயப்படுத்தக் கூடாது
புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், ஓட்டுநர் உரிமம் மற்றும் RC-யின் பழைய முறையிலான அச்சு பிரதியை கட்டாயமாக கேட்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டுநர்கள் இனி தங்களது டிஜிட்டல் ஆவணங்களை மொபைல் போனிலேயே வைத்திருந்து தேவையான நேரத்தில் காண்பிக்க முடியும்.
பொதுமக்களுக்கு என்ன பயன்?
இந்த மாற்றத்தின் மூலம் ஓட்டுநர் உரிமம் மற்றும் RC கிடைப்பதில் ஏற்பட்டு வந்த தாமதம் குறையும். ஆவணங்களை அச்சிட்டு தபால் மூலம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாததால், புதிய உரிமம் அல்லது RC-யை விரைவாகப் பெற முடியும்.
குறிப்பாக புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுபவர்கள், புதிய வாகனம் வாங்குபவர்கள் ஆகியோருக்கு இந்த டிஜிட்டல் நடைமுறை பயனுள்ளதாக இருக்கும்.
இனி வாகன ஓட்டுநர்கள் தங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் RC-யை மொபைல் போனில் டிஜிட்டல் வடிவில் வைத்திருப்பதன் மூலம் தேவையான நேரங்களில் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
