ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் இது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். தமிழக அரசு உரிய சட்ட விளக்கங்களுடன் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தை பொருத்தவரை உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதை தொடர்ந்து அதற்கு உரிய சட்டம் கொண்டு வருவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து அதற்கு தொடர்பான அறிக்கையும் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இதற்கு முன்பாகவே தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்து விதமான கருத்துக்களையும் ஆராய்ந்து இந்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் 40 நாட்களுக்கு மேல் கிடப்பில் வைத்திருந்தார். அதனை தொடர்ந்து ஆளுநர் நேற்று அந்த சட்டம் மசோதா குறித்து சில கேள்விகளை தமிழக அரசிடம் கேட்டிருந்தார். அதில் மாநில அரசுக்கு இந்த தண்டனைகள் வழங்குவது தொடர்பான அதிகாரம் இருக்கிறதா என்பதை பற்றியும் ஒரு சில சட்ட விளக்கங்கள் தொடர்பாக விளக்கங்களை ஆளுநர் கேட்டிருந்தார்.
இது தொடர்பாக சட்டத்துறை மூலமாக ஆளுநருக்கு பதில் அனுப்பி வைக்கப்பட்டடு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆளுநர் கேட்டிருந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் அனுப்பியுள்ள நிலையில் ரம்மி தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக எவ்வித உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தமிழக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.