Homeசெய்திகள்தமிழ்நாடுஉண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி - சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

உண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி – சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

-

- Advertisement -

உண்மையை உலகுக்கு எடுத்து சொன்ன ஆளுநருக்கு நன்றி - சிதம்பரம் தீட்சிதர்கள் கடிதம்

சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்து ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இரண்டு விரல் பரிசோதனை என்கிற கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்த கொடுமைகளால் சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்று உள்ளார்கள். இது எல்லாம் என்ன என்று முதல்வருக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியதாக சொல்லி அதிரவைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதை அடுத்து தமிழக அரசு இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. ஆளுநர் அளித்த அந்த பேட்டியின் அடிப்படையில் சிறுமிகளுக்கு கட்டாய கன்னி தன்மை பரிசோதனை மேற்கொண்டதாக சொல்லப்படும் விவகாரத்தில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

நடந்தது என்ன? ஆளுநர் எழுப்பிய கன்னித்தன்மை பரிசோதனை சர்ச்சையில் டிஜிபி விளக்கம்

ஆளுநரின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருக்கிறார் . இவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் என்று கூறியிருக்கும் அவர், குழந்தை திருமணம் நடந்ததாக புகார்கள் வந்த நிலையில், அதன் உண்மை தன்மையை கண்டறிந்த பின்னர், அதற்கான ஆதாரங்களை திரட்டி பின்னர் சிதம்பரம் டவுன் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றத்தில் தொடர்புடைய எட்டு ஆண்கள் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் சட்ட ஆலோசகரின் அறிவுரையின்படி இரண்டு சிறுமிகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அந்த சிறுமிகளிடம் பெண் மருத்துவர்கள் மட்டுமே பரிசோதனை நடத்தினர். ஆனால் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்தவில்லை. அந்த சிறுமிகள் தற்கொலை செய்ய முயன்றனர் என்பது பொய்யான தகவல். அதுபோன்ற நிகழ்வு நடந்ததாக தகவல் எதுவும் இல்லை என்று தனது விளக்கத்தில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், உண்மையை உலகிற்கு எடுத்துச் சொன்ன ஆளுநருக்கு நன்றி என்று சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் , சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு நிர்வாகத்தில் கொண்டு வர வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை முயற்சித்தது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தங்களுக்கு உரியது என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது . தமிழக அரசால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தீட்சிதர்களை பழிவாங்க வேண்டும் என்று துடித்தார். இதற்காக கடலூர் மாவட்ட போலீசார்களை ஏவினர் தீட்சிதர்கள் குடும்பங்களில் பாலியல் விவாகம் நடப்பதாக யாரோ ஒருவர் சொல்லி இருக்கிறார் . இதன் பின்னர் ஆட்சி மேலிடம், கடலூர் மாவட்ட எஸ்பிக்கு உத்தரவு கொடுத்திருக்கிறது.

தீட்சிதர் வீட்டு இளம்பெண்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். நாங்கள் பால்ய விவாகம் தான் செய்து கொண்டோம் என்று எழுதி கொடுக்க சொல்லி அச்சுறுத்தினார்கள். ஆனால் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை . இளம்பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது . மருத்துவ பரிசோதனை என்கிற பெயரில் உலக அளவில் தடை செய்யப்பட்ட இருவிரல் சோதனையை நடத்தினர். இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அந்த பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது அந்த புகாரின் நகல் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் மனித உரிமை கேள்வி எழுப்பியது. இதன் பின்னர் முதல்வருக்கு கடிதம் அனுப்பி ஆளுநர் விளக்கம் கேட்டிருக்கிறார். ஆனால் எந்த பதிலும் அளிக்கவில்லை . தொடர்ந்து ஆளுநரே இந்த விஷயத்தில் நேரடியாக களமிறங்கி இருக்கிறார். தனக்கு வேண்டப்பட்ட சிலரை அனுப்பி நேரடியாக தீட்சிதர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி அதன் பின்னரே அந்த தகவல்களை பேட்டியின் மூலம் தெரிவித்து இருக்கிறார். இதற்கு தீட்சிதர்கள் சார்பில் ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

MUST READ