சென்னை பரந்தூர் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக எழுந்த அறிவிப்பும், அதுதொடர்பாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்விவகாரம் குறித்து திமுக சிறுபான்மை அணியின் மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞருமான அலிம் அல் புகாரி, தற்போதைய அரசின் முடிவுகளையும் அமைச்சரின் பதில்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
திட்டமிடல் இல்லாத அவசர முடிவு
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய முக்கியமான கேள்விகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அலிமல் புகாரி, பரந்தூர் திட்டத்திற்காக ஏற்கனவே நிலங்களை வழங்கி இழப்பீட்டுத் தொகை பெற்றவர்களிடம் இருந்து அந்த நிலங்களை எவ்வாறு திரும்பப் பெறுவது அல்லது வழங்கப்பட்ட நிதியை எப்படி மீட்பது என்பது குறித்து எவ்விதத் தெளிவான திட்டமும் அரசிடம் இல்லை என்று சாடினார்.

மூன்று மாதங்களில் மாற்று இடம் சாத்தியமா?
இரண்டாவது விமான நிலையம் அமைப்பது என்பது பல ஆண்டுகால தீவிர கள ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்குப் பிறகே பரந்தூரில் இறுதி செய்யப்பட்டது. ஆனால், எந்தவொரு மாற்று இடத்தையும் தேர்வு செய்யாமலும், விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report) தயார் செய்யாமலும் அவசர கோலத்தில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெறும் மூன்று மாத கால அவகாசத்திற்குள் மற்றொரு மாற்று இடத்தைக் கண்டறிந்து திட்டத்தைத் தொடங்குவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் நிர்மல் குமார் மீது கடும் விமர்சனம்
தமிழக சட்ட மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட நேரடி வினாக்களுக்குப் பதிலளிக்காமல், அவையின் கவனத்தைத் திசைதிருப்ப முயல்வதாக அலிமல் புகாரி குற்றம் சாட்டினார். நிர்மல் குமார் தொடர்ச்சியாக வதந்திகளையும் தவறானத் தகவல்களையும் பரப்பி வருவதாகவும், அவர் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தப் பின்னணியில் இருந்து கொண்டு செயல்படுவதாகவும் தனது பேட்டியில் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
