“ரயில்வே துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்கப்பட்ட ஆயிரம் ரூபாயை, தமிழக மக்களிடம்1001 ரூபாயாக வசூலித்து, இந்திய ரயில்வே துறைக்கு திரும்ப அனுப்பும் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கையில் எடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.”
“பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் உயர்த்தி பேசிய இந்திரா காந்தி குறித்து பேச, நரேந்திர மோடிக்கு கூட தகுதி இல்லாத நிலையில் நேற்று முளைத்த காளான் அண்ணாமலைக்கு என்ன தகுதி என்றும் அவர் வினவியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வசந்தகுமாரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடைபிடிக்கப்பட்டது.
அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை உள்ளிட்டோர் வசந்தகுமாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த செல்வ பெருந்தகை,
தொடர்ந்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு புறக்கணிப்பதையும் தமிழகத்தை பழிவாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு செயல்படுவதையும் காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ஆயிரம் ரூபாயை மட்டும் நிதியாக ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த மாவட்ட வட்டார தலைவர்கள், பொதுமக்களிடம் கையேந்தி, ஒரு ரூபாயை கூடுதலாக போட்டு, ஆயிரத்து ஒரு ரூபாயை ரயில்வே துறைக்கு திருப்பி அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து இருப்பதாக அவர் கூறினார்.
தேர்தல் வரை ஏற்றாமல் இருந்த பெட்ரோல்-டீசல் எரிவாயு விலையை உயர்த்தியதோடு சுங்கச்சாவடிகளில் ஐந்து முதல் ஏழு விழுக்காடுகள் கட்டணத்தை உயர்த்தி உள்ளதையும் செல்வப்பெருந்தகை கண்டித்தார்.
மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான கோடி செலவில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை ஆறு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் நொறுங்கி விழுந்திருப்பதே ஒன்றிய அரசின் இலட்சணம் என அவர் சாடினார்.
சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது குறித்து ஒன்றிய அரசிடமிருந்தோ மாநில அரசிடமிருந்தோ இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் ஒன்றிய அரசு உலகத் தலைவர்களின் பெருமையை சிதைப்பதாகவும் செல்வம் குறை கூறினார்.
தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலும் கலைஞர் ஆட்சியிலும் ஏராளமான சிலைகள் நிறுவப்பட்டு சுனாமி மற்றும் புயல்களில் கூட சேதமாகாமல் இருப்பதே ஒன்றிய மோடி அரசிற்கும் தமிழ்நாட்டில் ஆட்சி செய்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்என அவர் வேறுபடுத்தினார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கள் கூட தாக்கப்பட மாட்டார்கள், பாதுகாப்பாக மீனவர்கள் இருப்பார்கள் என கூறி ஆட்சிக்கு வந்த பிறகு, இப்பொழுது மீனவர்களின் உயிர்ப்பலிகளும் இலங்கை அரசால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் குஜராத் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒன்றிய அரச, தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறியுள்ளது என்றும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.
அரசியலமைப்பு சட்டத்தை சிதைத்தவர் இந்திரா காந்தி என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு,
இந்திரா காந்தி பற்றி பேசுவதற்கு நரேந்திர மோடிக்கு கூட எந்த தகுதியும் கிடையாது என கூறிய அவர், நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் அன்னை இந்திரா காந்தி பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என்றார்.
இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி, துர்கா தேவி என முன்னாள் பிரதமர் வாஜ்பாயே பாராட்டினார்.ன என்று குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, அரைவேக்காட்டுத்தனமாக இந்திரா காந்தியை குறித்து பேசுவதற்கும் தலைவர் ராஜீவ் காந்தியை குறித்து பேசுவதற்கும் அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பினார்