புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரைக் கூட கைது செய்யாதது ஏன் என நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இச்சம்பவமானது நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரக்கூடிய சூழ்நிலையிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. மேலும் குற்றவாளிகளை கண்டறிய வேங்கைவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 21 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டி மலம் கலக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளாகியும் ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்ய முடியாதது ஏன்..? இது தொடர்பாக இரு வாரங்களில் தீர்க்கமான முடிவை எட்ட அரசுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு அவகாசம் அளித்துள்ளது