பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து- குற்றவாளி கைது
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்செல்வி (47) என்ற பெண்ணை கத்தியால் குத்திய, சுப்ரமணியை (53) போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மக்கான் சந்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47). தனது பேரனுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக துணிமணிகள் மற்றும் பழவகைகளை வாங்கிக் கொண்டு செங்கல்பட்டுக்கு செல்ல பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வாங்கிக் கொண்டு வரும்போது ஒன்றாவது பிளாட்பாரத்தில் அடையாளம் தெரியாத நபர், தன் கையில் இருந்த கூர்மையான கத்தியால் தமிழ்ச்செல்வியின் வலது கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கையில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வி உடனடியாக ஆட்டோ மூலம் தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் மர்ம நபரை தேடி வந்த நிலையில், குற்றவாளி பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகர் சுப்பிரமணியன் என்பது தெரிய வந்தது. மேலும் இவர் வண்டலூர் அருகே உள்ள இரணியம்மன் கோவிலில் வாகனங்களுக்கு பூஜை செய்யும் வேலைகளை செய்து வந்ததும், குடிப்பழக்கம் உள்ள நிலையில் நேற்று மது அருந்திவிட்டு பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் சிமெண்ட் இருக்கை அருகில் படுத்துள்ளார், அப்போது தமிழ்செல்வி அங்கு உட்கார்ந்த நிலையில், சுப்ரமணியனின் கால் அருகில் இருப்பதால் தள்ளி வைக்க கேட்டுள்ளார். இதனால் குடிபோதை ஆத்திரற்றில் தமிழ்செல்வியை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது, மேலும் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.