“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு, மேகதாது அணை விவகாரம் எனப் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் விஜய்யின் பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாடச் சொல்லும் தவெக அரசின் நிர்வாகம் எங்கே செல்கிறது?” என முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கடுமையாகச் சாடியுள்ளார்.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 75 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள காரசாரமான கண்டன அறிக்கை பின்வருமாறு,

“ஆட்சி அமைந்த அதிர்ச்சியிலிருந்தே விஜய் இன்னும் வெளிவரவில்லை!”
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “தமிழகத்தில் தங்களின் ஆட்சி அமையாது என்ற எண்ணத்தில், அறம், பொருள், இன்பம் என சாத்தியமே இல்லாத 326 திட்டங்களை, நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொள்ளாமல் காணல் நீர் போல தேர்தல் அறிக்கையில் விஜய் அறிவித்தார். அதை நம்பி மக்களும் வாக்களித்து விட்டார்கள். இப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் தவெக ஆட்சி அமைந்து 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், ஆட்சி அமைந்த அதிர்ச்சியிலிருந்து முதல்வர் விஜய் இன்னும் வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. அவர் முழிக்கின்ற ஆச்சரிய மொழிதான் நமக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
பொய்த்துப் போன தேர்தல் வாக்குறுதிகள்: விவசாயிகள் போராட்டம்!
தொடர்ந்து தவெக அரசின் திட்டங்களை விமர்சித்த அவர், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி விவசாயிகளுக்குப் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்த வேளையில், விஜய்யின் தற்போதைய அறிவிப்பு பேரிடியாக இறங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சாரக் கட்டணக் கண் துடைப்பு
வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு மட்டுமே 200 யூனிட் இலவசம் என நிபந்தனை விதித்துள்ளது வெறும் கண் துடைப்பு. தற்போதைய தமிழகத்தில் மின்சாரத்தையே காணோம் என்று தேடும் அளவிற்கு, நாடு முழுவதும் இரவில் பொதுமக்கள் போராட்டம் நடத்தாத நாளே இல்லை என்ற அவல நிலைதான் உள்ளது.
750 கோடி ‘தாய்மாமன்’ திட்டம்: நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்தா?
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தவெக அரசின் ‘தாய்மாமன் திட்டம்’ குறித்துப் பேசிய அவர், பொருளாதார ரீதியாகப் பல கேள்விகளை எழுப்பினார்.
பொருளாதாரக் கணக்கீடு
“மாநிலத்தில் பிறக்கும் சுமார் 4.41 லட்சம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கினால், அதன் மதிப்பு மட்டுமே ₹580.79 கோடி. செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி எனச் சேர்த்தால் ₹750 கோடி வரை அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து, ரூபாயின் மதிப்பை பலவீனப்படுத்தும் தங்கம் இறக்குமதியை விடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் முதலீடுகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியே பலமுறை கூறியுள்ளார். அப்படியிருக்க, இந்தத் திட்டம் மாநில பொருளாதாரத்திற்கு எப்படிப் பங்களிக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “புரட்சித்தலைவி அம்மா பெண் கல்வியை ஊக்குவிக்க 25,000 ரூபாயும் தாலிக்குத் தங்கமும் தந்தார். அதைத் தொடர்ந்து எடப்பாடியார் தாலிக்குத் தங்கத்தை 8 கிராமாக (1 பவுன்) உயர்த்திக் கொடுத்தார். எனவே, விஜய் வெறும் ‘ரீல்’ தாய்மாமனாக இல்லாமல், நிஜ ‘ரியல்’ தாய்மாமனாக மாறி, பெண் திருமணத்திற்கு 1 பவுன் தங்கம் வழங்கும் திட்டத்தை அறிவிக்க மனது வைப்பாரா?” என்றும் சவால் விடுத்தார்.

“இட்லி, தோசையை ஆய்வு செய்யும் முதல்வர்… கொண்டாட்டத்தில் புஸ்சி ஆனந்த்!”
தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய ஆர்.பி. உதயகுமார், “மாணவர் விடுதியில் இட்லி, தோசை, சப்பாத்தி ஒழுங்காகப் போடுகிறார்களா என்று பார்க்க ஒரு மாநிலத்தின் முதல்வரே நேரடியாகச் சென்று ஆய்வு செய்கிறார் என்றால், இவர்களின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பாருங்கள்” என்றார்.
“மேகதாது அணைப் பிரச்சினை, பெண்கள் பாதுகாப்புச் சீர்கேடு, போதைப்பொருள் நடமாட்டம் எனத் தமிழக மக்கள் கவலையில் இருக்கும்போது, அமைச்சர் புஸ்சி ஆனந்தோ, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’திரைப்பட வெளியீட்டை உலகெங்கும் தியாகிகள் தினம் போலவும், பொங்கல், தீபாவளி போலவும் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என அமைச்சர்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தரவிடுகிறார். இவர்களின் இந்த அதிரடிகளைப் பார்த்தால், அடுத்த அறிவிப்பாக ஜனநாயகன் படம் வெளியாகும் நாளில் அரசு விடுமுறை என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஐயோ… எங்கே செல்லுகிறது இந்தத் தமிழகம்?” என்று கவலையோடு தனது கண்டனத்தை நிறைவு செய்தார் ஆர்.பி. உதயகுமார்.
