மகளிர் உரிமைத் தொகை- கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முடிவுச் செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற விரும்பும் பயனாளிக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், உச்ச வயது ஏதுமில்லை. சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் உள்ளோருக்கு ரூபாய் 1,000 கிடையாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அனைத்து துணை ஆணையர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன் அடைய விண்ணப்பிக்கும்போது, பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். வரும் 17-ம் தேதிக்குள்ளாக அனைத்து நியாய விலை கடைகளிலும் கை விரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய
வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.