இறந்தும் 7 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்! நெகிழ்ச்சி சம்பவம்
கோவையில் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்புகள் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் சீனிவாசன் (25). கோவையில் தங்கி பணிபுரிந்து வந்தார். கடந்த 29ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் இருந்ததாக தெரிகிறது. தொட்டிபாளையம் பிரிவு அருகில் சென்றபோது விபத்தில் சிக்கிய அவர் பலத்த காயமடைந்தார்.

இதை அடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் அவிநாசி சாலையில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சீனிவாசன் மூளை சாவு ஏற்பட்டது. இது குறித்து சீனிவாசனின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சீனிவாசனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தார்.
இதை அடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், இருதயம், நுரையீரல், தோல், எலும்பு ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கும், இருதயம் மற்றொரு சிறுநீரகம், தோல், எலும்பு ஆகியவை கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.