நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு – சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு.
சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்றுவதும், சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலும் பாதுகாப்பான போக்குவரத்து சூழலுக்கு வழி வகுக்கும்.இதனால் குறிப்பாக, விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல் மற்ற சாலைப் பயணிகளையும் பாதிப்படைய செய்யும் என்பதால் வேக வரம்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சாலை கட்டமைப்புகளில் நவீன முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற உண்மைகளை கருத்தில் கொண்டு, சென்னை மாநகரில் பல்வேறு வகை வாகனங்களுக்கு 2003ல் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மறுமதிப்பீடு செய்து வேக வரம்பினை மாற்றியமைக்க வேண்டும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமைத்தார்.
இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் நகரங்களில் வேக வரம்பு மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஒப்பீட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மேலும், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஆர்டிஇ, ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களுடன் போக்குவரத்து அமைப்பு மற்றும் சாலை வடிவமைப்பைப் பொறுத்து வாகனங்களின் வேக வரம்பு நிர்ணயம் குறித்து விவாதிக்கப்பட்டன.
♦ இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
♦ கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
♦ இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
♦ ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.
♦ குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.