உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியின் சீனாவின் ஹூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் பரவ தொடங்கி 4 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அதன் தாக்கம் குறையவில்லை. தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருவதால் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் முதல், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் ஒமைக்ரான், XB, XBB, JN1, HV.1 என பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 23,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 70 கோடியே 11 லட்சத்து 55 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 43 ஆயிரத்து 185 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் சுமார் 36 ஆயிரம் பேரு உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67.22 கோடியாக உள்ளது. இதுவரை சுமார் 70 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடதக்கது.