வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும், நவீன உலகிற்கும் மத்தியில், ஒரு நாடு உலக வரைபடத்திலிருந்தே நிரந்தரமாக மறையப்போகும் அபாயம் குறித்து உலகளாவிய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கும் ஹவாய் தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ள தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள ‘துவாலு’ (Tuvalu) என்ற தீவு நாடுதான், கடல் நீர்மட்ட உயர்வால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.


இரண்டாவது சிறிய நாடு: வெறும் 26 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட இந்த குட்டி நாடு, உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட சுதந்திர நாடாகும். சுமார் 9,300 முதல் 11,000 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்தத் தீவுக்கூட்டம், கடல் மட்டத்திலிருந்து வெறும் 2 மீட்டருக்கும் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளது.
இரட்டிப்பு வேகத்தில் உயரும் கடல் நீர்: புவி வெப்பமடைதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உலகளவில் உயர்ந்து வருவது தெரிந்ததே. ஆனால், துவாலு அமைந்துள்ள பகுதியில் கடல் நீர்மட்டம் உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு வேகத்தில், அதாவது ஆண்டுக்கு 3.9 மி.மீ என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதுதான் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடல் நீர் நிலத்திற்குள் ஊடுருவுவதால்:
நிலத்தடி நீர் உப்பாக மாறி, கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அடிக்கடி தாக்கும் புயல்கள் கடற்கரைகளை வேகமாக அரித்து வருகின்றன.
நாசா மற்றும் ஐநா எச்சரிக்கை: தற்போதைய சூழல் நீடித்தால், 2050 முதல் 2100-ம் ஆண்டிற்குள் துவாலுவின் பெரும்பகுதிகள் கடலுக்குள் மூழ்கி, மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்று நாசா (NASA) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.
டிஜிட்டல் நாடாக மாறும் முயற்சி: இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில், தங்கள் கலாச்சாரம், இறையாண்மை மற்றும் வரலாற்று நினைவுகளைப் பாதுகாக்க துவாலு அரசு অভিনவ முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டையே ‘மெட்டாவர்ஸ்’ (Metaverse) தொழில்நுட்பம் மூலம் ஒரு டிஜிட்டல் நாடாக மாற்றும் நடவடிக்கையில் துவாலு ஈடுபட்டுள்ளது. மேலும், இணைய உலகில் நாம் அதிகம் பயன்படுத்தும் ‘.tv’ என்ற டொமைனை (Domain) குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய்தான், அந்நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது.
“எந்த ஒரு நாடும் அழியக்கூடாது; அதைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து உதவ வேண்டும்” என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
சீனச் சந்தைக்காக அலிபாபா உதவியுடன் சொந்த AI மாடலை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்!
