ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் சனிக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஆடிப்பெருக்கு நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.