தனது காரில் பயணித்த உயர் அதிகாரியின் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய நான்கு ரயில்வே அதிகாரிகளைக் காரில் இருந்து இறக்கிவிட்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுநருக்கு, ராபிடோ (Rapido) நிறுவனம் 100 ஆண்டுகள் தடை விதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதிய பேச்சால் எழுந்த மோதல்
பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ராபிடோ செயலி மூலம் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது காரில் பயணித்த நான்கு ரயில்வே அதிகாரிகள், தங்களது மேல் அதிகாரியின் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகவும் கேவலமாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஓட்டுநர், தவறாகப் பேசிய அதிகாரிகளைக் காரில் இருந்து உடனடியாக இறங்கிப் போகுமாறு கூறியுள்ளார்.

99 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் சஸ்பெண்ட்
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஓட்டுநரின் ராபிடோ கணக்கை அந்நிறுவனம் திடீரென முடக்கியுள்ளது. அதில், அவருக்கு 99 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் (மொத்தம் 100 ஆண்டுகள்) சஸ்பெண்ட் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த செயலியில் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை வரும் ஜூலை 19, 2126 அன்றுதான் முடிவடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுந்துள்ள புதிய சர்ச்சை
சாதிய ரீதியாக இழிவாகப் பேசிய பயணிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதைத் தட்டிக்கேட்டு இறக்கிவிட்ட பட்டியலின ஓட்டுநரின் வாழ்வாதாரத்தைப் முடக்கும் வகையில் ராபிடோ நிறுவனம் 100 ஆண்டுகள் தடை விதித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
