வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனை அடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யுனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. எனினும் அந்நாட்டில் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதன் காரணமாக இந்திய எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.