அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்- ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்குமாறும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. ஈரோடு தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் விரிவாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிமுக பாஜக இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாகவும் கட்சியினுடைய மூத்த நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை தொடங்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் , கே.பி. முனுசாமி, “தேர்தலுக்குப் பிறகு மாவட்ட செயலாளர் கூட்டம் வழக்கமான ஒன்றுதான். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பணியாற்ற பல்வேறு உத்வேகங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அது குறித்த முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்பார்” என்றார்.