மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வாலிபரை 10 கிலோமீட்டர் துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியைச் சேர்ந்தவர் லில்லி ராணி (64). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் இன்று காலை வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். லில்லி ராணியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, அவரது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்துள்ளார். அப்போது லில்லிராணி தாலியை பிடித்துக் கொண்டதால், தாலி உறுப்படிகளுடன் இரண்டரை சவரன் மட்டும் கையில் சிக்கிக்கொண்டது. அதேநேரம் மீதமிருந்த 6 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் மர்மநபரை இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்றனர். திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை நோக்கி சென்ற திருடனை சுமார் 10 கிலோமீட்டர் துரத்திசென்றபோது, கரட்டுப்பட்டி என்ற இடத்தில் கார் மோதியதில் நிலைதடுமாறி அந்த நபர் கீழே விழுந்தார். அப்போதும் பிடிபடாமல் வண்டியை போட்டுவிட்டு காட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய அவரை விடாமல் துரத்திச் சென்று பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வையம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்தநபர் திண்டுக்கல் மாவட்டம், புதுப்பட்டியைச் சேர்ந்த குமார் (வயது 37) என்பது தெரியவந்தது. கார் மோதி கீழே விழுந்ததில் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குமார் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய் போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் வையம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.